Wednesday, March 21, 2012

2. வதந்திகளைப் பரப்புங்கள்!



பொதுவாக இந்தியர்களுக்கு Sense of Humour (நகைச்சுவை உணர்வு) குறைவு என்று ஒரு கருத்து உண்டு. இதில் ஓரளவு உண்மை இருக்கலாம். ஆனால் நம்முடைய Sense of Rumour ஐ (வதந்தி ஆர்வம்) யாரும் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது.

குழந்தைகளுக்கு அடுத்தபடியாக நம் நாட்டில் அதிகமாக உற்பத்தியாவது வதந்திகள்தான்.  மின் தட்டுப்பாடு, தொழிலாளர் பிரச்னை, மூலப்பொருள்  பற்றாக்குறை போன்ற எவற்றினாலும் உற்பத்தி பாதிக்கப்படாத பொருள் ஒன்று உண்டென்றால், அது வதந்திதான். இதற்கான மூலப்பொருளுக்குப் பஞ்சமே இல்லை (சில சமயம் மூலப்பொருளே தேவைப்படுவதில்லை!) உற்பத்திக்குத் தேவையான உழைப்பு சம்பந்தப்பட்டவர்களால் இலவசமாகவே வழங்கப்படுகிறது. தேவையான சக்தியும், தானே உற்பத்தியாவதுடன், எடுக்க எடுக்கக் குறைவதே இல்லை. சொல்லப்போனால், வதந்தியை உருவாக்கவும், பரப்பவும் பயன்படுத்தப்படும் சக்தியைச் சேமிக்க முடியுமானால், அதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி கூடச் செய்யலாம்!

வதந்தித் தொழிற்சாலைகளில் வேலைநிறுத்தம், கதவடைப்பு எதுவும் கிடையாது. வதந்திகளை உருவாக்குபவர்கள் (producers), விநியோகிப்பவர்கள் (Distributors), பரப்புபவர்கள் (Dealers), செவிமடுப்பவர்கள் (Consumers) ஆகியோரிடையே நிலவும் நல்லுறவு மற்ற தொழில், வர்த்தகப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு நல்ல உதாரணமாக விளங்குகிறது. வேறு எந்தப் பொருளுக்கும் இல்லாத ஒரு  சிறப்பு வதந்திக்கு உண்டு. வதந்தியை நுகர்பவரே (Consumer) பரப்புகிறவராகவும் (Distributor) ஆகும்  வாய்ப்பைப்  பெறுகிறார். வேறு  எந்த  நுகர்வோருக்கும்  இந்தச்  சலுகை  கிடைக்காது. இந்தச் சலுகையினால், நுகர்பவர் மனத்திருப்தி என்கிற லாபத்தைப் பெறுகிறார்.

தேவையான தருணங்களில் உற்பத்தியைப் பெருக்க, வதந்தித் தொழிற்சாலைகள் தயங்குவதே இல்லை.

முன்பெல்லாம் வதந்தி என்பது அருவருக்கத்தக்கதாகக் கருதப் பட்டது. ஆனால் இப்போது அப்படி  இல்லை. எந்தப் பத்திரிகையை எடுத்தாலும் (எந்த மொழிப் பத்திரிகையானாலும் சரி), அதில்  ஒரு சில வதந்திகளாவது கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். ஆனால் வதந்திகள் அங்கே பலவிதமான கௌரவமான பெயர்களில் வெளியிடப்படுகின்றன. 'கிசுகிசு,' 'காதில் விழுந்தவை,' 'ரகசியம் பரம ரகசியம்,' 'கேள்விப்படுகிறோம்' போன்ற பகுதிகள் இல்லாத பத்திரிகைகளைப்  பார்ப்பது அரிது.  செய்திப் பத்திரிகைகளும் சளைத்தவை அல்ல. அவற்றில், 'அதிகாரபூர்வமற்ற தகவல்கள்,' 'எங்களுக்குக்  கிடைத்த தகவல்படி,' 'பெயர் சொல்ல விரும்பாத ஒரு தலைவர் அல்லது அதிகாரி கூறியது,'  என்ற  பலே வடிவங்களில் வதந்திகள் பிரசுரமாகின்றன.

இவற்றிலிருந்தெல்லாம்  நாம்  தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், வதந்திகளை நாம் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான்!

வதந்திகள் வாழ்க்கைக்குச் சுவையூட்டுகின்றன, உற்சாகமளிக்கின்றன, சுவாரஸ்யம் தருகின்றன. வதந்திகள் இல்லாவிட்டால் வாழ்க்கை மிகவும் டல் அடிக்கும். பொதுவாக மனிதர்களின்  கவனம் கூர்மையடைவதே வதந்திகளைக் கேட்கும்போதுதான். வதந்திகள் கவனத்தில் பதிவதுபோல் செய்திகள் பதிவதில்லை அல்லவா?

வதந்திகளால்   சம்பந்தப்பட்டவர்கள் பாதிக்கப்படுவதில்லையா என்ற கேள்வி எழலாம். நியாயமான கேள்விதான். இதற்கு நியாயமான பதிலும் உண்டு. ஆமாம். உண்மைதான். அதற்கு என்ன செய்ய முடியும்? வதந்திகளைக் கேட்டு ரசித்து மகிழ்பவர்களோடு ஒப்பிட்டால், வதந்திகளால் பாதிக்கப்படுபவர்கள் மிகச் சிலர்தான். எனவே ஜனநாயக மரபுகளின்படி, பெரும்பான்மையோருக்கு எது உகந்ததோ அதை ஏற்றுக்கொள்வதுதானே  வழி? எனவே பாதிக்கப்படுபவர்களின் பலவீனமான எதிர்ப்புப் குரலை அலட்சியம் செய்ய வேண்டியதுதான்!

நாம் இப்போது 21 -ஆம் நூற்றாண்டை நோக்கி நடை போட்டுக்   கொண்டிருக்கிறோம். (ராஜீவ் காந்தி பிரதமராக இல்லாவிட்டாலும் நாம்            21 -ஆம் நூற்றாண்டைநோக்கிச் செல்வதை யாரும் தடுத்து விட முடியாதல்லவா?) தகவல் தொடர்புத் துறையில் முன்னேற்றம் அடைவதுதான் இப்போது நமக்கு ஒரு பெரிய சவாலாக அமைந்திருக்கிறது. எந்த நவீனமான முறையைப் பயன்படுத்தினாலும் செய்திகள் பரவச் சில காலம் பிடிக்கிறது. உதாரணமாக எம்.ஜி.ஆர். இறந்த செய்தி எல்லோருக்கும் எட்டச் சில மணி நேரங்களாவது பிடித்திருக்கும். ஆனால் அவர் இறப்பதற்குப் பல மாதங்கள்  முன்பு அவர் இறந்து விட்டதாக ஒரு வதந்தி பரவியது. வதந்தி எங்கே துவங்கியது எப்படிப் பரவியது என்று புரிந்து கொள்வதற்குள் தமிழகத்தின் மூளை முடுக்குகளில் எல்லாம் பரவி ஆங்காங்கே கடையடைப்புகளும், வன்முறைகளும் நடைபெறத் தொடங்கி விட்டன.


வதந்தி பரவும் வேகத்தை யாராலாவது  அளக்க முடியுமானால், அதன் வேகம் ஒளியின் வேகத்தை விட அதிகம் என்பது புரியும். ஒளியின் வேகத்துக்கு இணையான வேகத்தை அடையும் முயற்சியில் விஞ்ஞானிகள் இன்னும் வெற்றி பெற வில்லை. அத்தகைய வேகத்தை எட்ட முடிந்தால் காலத்தையே வென்று விடலாம் என்பது ஐன்ஸ்டீனின் கணிப்பு. இந்த முயற்சியில் மண்டையை உடைத்துக் கொண்டிருக்கும்  விஞ்ஞானிகள் வதந்தியின் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பினால் தங்கள் ஆராய்ச்சியில் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது.

வதந்தித் தொழிலை ஊக்குவிக்க அரசாங்கம் எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. தேசிய முன்னணி அரசின் பட்ஜெட்டில் கூட இந்தத் தொழிலுக்கு எந்த வித வரிவிலக்கும் அளிக்கப்படவில்லை. ஆனால் இந்தப் புனிதப் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் இது போன்ற சலுகைகளை நம்பியிருக்கவில்லை. அவர்கள் தற்சார்பு உடையவர்கள்!

எனவே வதந்திகளைப் பற்றி இழிவாகப் பேசுவதையும், வதந்திகளைப் பரப்புவதில் ஈடுபடுவோர்களைப் பற்றி மட்டமாகப் பேசுவதையும் கைவிட வேண்டும். செய்தியாளர்களை News Reporters என்று குறிப்பிடுவது போல் வதந்தியாளர்களை Rumour Reporters என்று மரியாதையாகக் குறிப்பிட வேண்டும். Rumour Mongers போன்ற வசைச் சொற்களைப்  பயன்படுத்தக் கூடாது.

வதந்திகளை ஊக்குவிக்க, ரூமர் டிரஸ்ட் ஆப் இந்தியா (RTI), யுனைடட் ரூமர் ஆப் இந்தியா (URI), ரூமாச்சார் போன்ற செய்தி நிறுவனங்களை நிறுவ வேண்டும்.
('தினமணி கதிர்' 23 -9-1990 - இல் வெளியானது. எழுதியவர்: விஜய சாரதி)

Thursday, March 15, 2012

1. 'இதுதாண்டா' பைத்தியம்

ஏதோ என்னைச் சுட்டிக்காட்டி நாலு பேர் பேசிக் கொள்வதையே இந்தக் கட்டுரையின் தலைப்பாக வைத்து விட்டேன் என்று யாரும் நினைக்க வேண்டாம் .தமிழ்நாட்டில் பலருக்கும் இப்போது*  பிடித்திருக்கும் வியாதியின் பெயர்தான் இது.

என்னதான் சோமாறி, பேமானி போன்ற பல வார்த்தைகளை உருவாக்கியவர்கள் என்ற போதிலும், பொதுவாக நாம் மரியாதை தெரிந்தவர்கள்தான். ஆனால், எந்த வேளையில், இந்த 'இதுதாண்டா போலிஸ்' படம் வெளியாகி, இந்த 'இதுதாண்டா' பைத்தியம் நம்மைப் பற்றியதோ, அப்போதே நமது மரியாதை காட்டும் பண்பும், 'இதுதானாடா மரியாதை?' என்று மற்றவர்கள் கேட்கும் அளவுக்கு வந்து விட்டது.

என் பக்கத்து வீட்டில் வசிக்கும் பத்மநாபன் (நான் முன்பு பல ஜன்மங்களில் தொடர்ந்து செய்த பாவங்களுக்கும், பத்மநாபன் என் பக்கத்து வீட்டுக்காரராக அமைந்ததற்கும் உள்ள தொடர்பு பற்றி நான் இங்கே குறிப்பிட விரும்பவில்லை.'  இதைப்பற்றி 'இதுதாண்டா பூர்வ ஜன்ம பலன்' என்கிற வேறொரு கட்டுரையில் விரிவாக எழுதியிருக்கிறேன்) பற்றி முதலில் குறிப்பிட வேண்டும்.

மகாராஜராஜஸ்ரீ உயர்திரு மிஸ்டர் பத்மநாபன்காருஜி அவர்கள் பொதுவாகவே மற்றவர்களிடமிருந்து அதிகமாக மரியாதையை எதிர்பார்ப்பவர். (அவர் மற்றவர்களிடமிருந்து எதிபார்ப்பதையெல்லாம், மற்றவர்கள் அவரிடம் எதிர்பார்த்து ஏமாந்தால், அதற்கு அவர் பொறுப்பல்ல!) ஒருமுறை அவரை நான் 'என்ன சார்?' என்று விளித்ததற்காக, நான் மரியாதை கற்க வேண்டியதின் அவசியத்தைப் பற்றி எனக்கு ஒரு நீண்ட வகுப்பே எடுத்தார். வகுப்பு முடிந்ததும், நான் எந்த விதத்தில் மரியாதை தவறி நடந்து கொண்டு விட்டேன் என்று நான் கேட்ட சந்தேகத்திற்கு அவர் அளித்த விளக்கம்: நான் 'என்னங்க சார்' என்று சொல்லியிருக்க வேண்டுமாம். 'சரிங்க சார்' என்று சொல்லி விட்டு வந்து விட்டேன். வேறு என்னங்க சார் செய்வது?

பத்மநாபன் இப்படி என்றால், என் மூன்று வயதுப் பையன் மரியாதைகள் அற்ற சமுதாய அமைப்பை நிறுவும் லட்சியம் கொண்டவன்! இந்தச் சிந்தனை வேறுபாட்டினால் இருவருக்கும் இடையே அடிக்கடி கடுமையான கருத்து மோதல்கள் ஏற்படுவது உண்டு. இறுதியில், என் குமாரன், 'போடா  முட்டாள்' என்று சொல்லி விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பது வழக்கம்!

பத்மநாபன் பலமுறை என்னிடம் குறைப்பட்டுக்கொண்டதன் பேரில், என் பையனுக்கு சுமார் ஆறு மாதங்கள் மரியாதைக்கலையில் டிப்ளமா பெறுமளவுக்குப் பயிற்சி அளித்த பிறகு, பெருமையுடனும் (தைரியத்துடனும்) அவனை பத்மநாபனிடம் அழைத்துச் சென்றேன்.


வசிஷ்டர் முன்பு நின்ற விஸ்வாமித்திரர் போல ப.வீ.ப வின் முன்பு பணிவாக நின்ற என் பையன், 'குட் மார்னிங் அங்க்கிள்' என்றான். பத்மநாபனின் முகம் மழைக்காலத்தில் மலரும் தாமரை போல் மலர்ந்தது. (மழைக்காலத்தில் சூரியன் எப்போதாவதுதான் தலை காட்டும் , ஆதலால், தாமரையும் எப்போதாவதுதான் மலரும் என்று இந்த உவமைக்குப் பொருள் கொள்க!)
'பரவாயில்லையே!' என்றார் ப.வீ.ப. ('அங்க்கிள்ஜி    என்று சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டிருந்திருப்பார்!)

தொடர்ந்து, என் பையன், "சாப்பிட்டீங்களா?" என்றான்.
"அடே!"
"எங்க வீட்டுக்கு வாங்க."
"என்னடா இது?" என்றார் ப.வீ.ப. நம்ப முடியாத மகிழ்ச்சியுடன், என்னைப் பார்த்து. (இதனால், 'என்னடா இது?' என்று அவர் என்னை விளித்ததாக எடுத்துக் கொள்ளக்கூடாது. பத்மநாபன் மரியாதை தெரிந்தவர்!)

அப்போதுதான், இரண்டாவது முறையாக அந்த அணுகுண்டு விழுந்தது. (முதல் முறை விழுந்தது ஹிரோஷிமாவில் என்று கேள்வி.)

"இதுதாண்டா  மரியாதை!"  என்றான் என் பையன்.

இப்போது பத்மநாபன் என் பக்கத்து வீட்டில் இல்லை. வீடு மாற்றிக் கொண்டு போய் விட்டார். (என் பூர்வ ஜன்மப் பலனில் முதல் பாகம் முற்றியது!)

இந்த 'இதுதாண்டா' பைத்தியம் என் பையனுக்கு மட்டுமே படித்திருந்தால் நான் அதிகம் கவலைப் பட்டிருக்க மாட்டேன். ஆனால் என்னைச் சுற்றி இருக்கும் எல்லோருமே ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் 'இதுதாண்டா' என்று சொல்லிக் கொண்டிருப்பதால்தான் நான் இது பற்றிக் குறிப்பிட வேண்டியிருக்கிறது.

ஒருநாள் மார்க்கெட்டுக்குக் காய்கறி வாங்கப் போயிருந்தேன். ஒரு கூடைக்காரியிடம் வெண்டைக்காய் வாங்கப் போனால், பக்கத்தில் இருந்த இன்னொரு கூடைக்காரி, "இதுதாண்டா பிஞ்சு வெண்டை" என்றாள். அன்று என் வீட்டில் சுட்ட அப்பளம்தான்!

கோவிலுக்குப் போனால், அர்ச்சகர் தீபாராதனை காட்டிக் கொண்டே, "இதுதாண்டா முருகன்" என்றார்.

ஆஃபீசில் சம்பளம் வாங்கும்போது காஷியர் சம்பளக் கவரைக் கையில் கொடுத்து, "இதுதாண்டா சம்பளம்" என்கிறார்.

ஒருமுறை கடற்கரைக்குப் போனபோது, படகு மறைவில் உட்கார்ந்திருந்த ஒரு காதல் ஜோடி என் கண்ணில் பட்டு விட்டார்கள். வெட்கப்படுவார்களோ, பயந்து அலறுவார்களோ என்று நான் சங்கடப் பட்டுக்கொண்டிருந்தபோது, காதலன் என் முன்னே வந்து, "இதுதாண்டா காதல்" என்றானே பார்க்க வேண்டும்!

இப்படியே போனால், இந்த 'இதுதாண்டா' பைத்தியம் முற்றிப் போய் மரியாதை என்பதே நமக்கு மறந்து போய் விடும்.

எனவே, 'இதுதாண்டா' என்ற வார்த்தைக்கு அரசாங்கம் உடனே தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்தத் தடை உடனே விதிக்கப்படா விட்டால் என்ன ஆகும் என்று சொல்லி விடுகிறேன். சட்டம் வரத் தாமதமானால் அதற்குள் எல்லோருக்கும் இந்த 'இதுதாண்டா' போடாமல் பேசவே வராது என்று ஆகி விடும். சட்டம் தாமதமாக வந்தால், சட்டம் வந்த பிறகும் பழக்கத்தை விட முடியாமல் பலரும் 'இதுதாண்டா' போட்டே பேசிக் கொண்டிருப்பார்கள்.

ஆனாலும் சட்டம் சட்டம்தானே? 'இதுதாண்டா' என்ற வார்த்தையைப் பயன்படுத்தியவர்கள் அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கோர்ட்டுக்கு அழைத்து வரப்படுகிறார்கள்  என்று வைத்துக் கொள்வோம்.

மாஜிஸ்திரேட் கேட்கிறார்: "தடை செய்யப்பட வார்த்தையைப் பயன்படுத்தினீர்களா?"

"ஆமாம்."

"ஐநூறு ரூபாய் அபராதம்!"

"ஐநூறு ரூபாயா? அக்கிரமமாக இருக்கிறதே?"

"இதுதாண்டா சட்டம்" என்று பழக்க தோஷத்தில்  சொல்லி விட்டு, மாஜிஸ்திரேட் நாக்கைக் கடித்துக் கொள்கிறார். அப்புறம், மாஜிஸ்திரேட்டுக்கு யார் அபராதம் விதிப்பது?

இந்தக் கட்டுரையை என் நண்பரான ஒரு பத்திரிகை ஆசிரியரிடம் காட்டினேன். படித்துப் பார்த்து விட்டு "என்னய்யா, ஸில்லியாக இருக்கிறதே!" என்றார்.

"இதுதாண்டா நகைச்சுவை" என்றேன்.

பளார் என்று ஒரு அறை விட்டார்.

"என்ன சார் இது?' என்றேன் கோபத்துடன்.

"இதுதாண்டா சன்மானம்" என்றார்.

"இதுதாண்டா உலகம்" என்று சொல்ல நினைத்து நாக்கைக் கடித்துக் கொண்டேன்.

(* 'இதுதாண்டா போலிஸ்' என்ற திரைப்படம் வெளியான நேரத்தில் எழுதப்பட்ட கட்டுரை இது)