Tuesday, October 16, 2012

4. மூக்குடைப்பு யாருக்கு? (ஒரு கற்பனை)

இந்தக் கதையில் வரும் பாத்திரங்கள்: குண்டுமணி (சுருக்கமாக மணி), முருகன், சூர்ய சந்திரன்  (சுருக்கமாக எஸ் சந்திரன் அல்லது எஸ் எஸ்) மற்றும் தங்கவேலு (சுருக்கமாக வேலு)

மணி: போர் அடிக்குதப்பா. என்ன செய்யறதுன்னே தெரியலே!

முருக: ஏண்ணே, ஒங்களை அடிக்குதே அந்த 'போரை' என்னால பாக்க முடியுமா?

மணி: கண்ணுக்கு முன்னால பெரிசாத் தெரியற வெக்கப்போரையே ஒன்னால பாக்க முடியாது. வெறும் 'போரை' நீ எங்கடா பாக்கறது, விளாம்பழத்தலையா? ஏண்டா இப்படி ஒளறிக்கொட்டறே?

முரு: அதில்லேண்ணே. நீங்கதான் எப்பவும் என்னப் போட்டு அடிக்கறீங்க. ஒங்களையே ஒரு 'போர்' அடிக்குதுன்னா அந்த'போரைப்' பாக்கலாமேன்னுதான்.

மணி: போரிங் பைப்பாலயே ஒம் மண்டையைப் பொளக்கணும்டா பேரிக்காத் தலையா! கிண்டலா பண்றே? பொழுது போறதுக்கு உருப்படியான யோசனை ஏதாவது சொல்லித் தொலைடா!

முரு: உருப்படியான யோசனை வேணும்னு கரெக்டா என்னைக் கேட்டிருக்கீங்களே! ஒங்களுக்கு அதெல்லாம் தோணாதுன்னுதானே?

மணி: டேய்!

முரு: கோவிச்சுக்காதீங்கண்ணே! ஒரு அருமையான வெளையாட்டு வெச்சிருக்கேன். 'அரசியல் அரங்கம்' வெளையாட்டு வெளையாடலாமா?

மணி:  அரட்டை அரங்கம்னு கேள்விப்பட்டிருக்கேன். அதென்னடா 'அரசியல் அரங்கம்?' ஒன்ன மாதிரி கொரங்குப் பசங்க வெளையாடறதா?

முரு: இல்லீங்கண்ணே. இந்த எம்.ஏ. படிச்சவங்கள்ளாம் வெளையாடுவாங்களே!

மணி: எம்.ஏ.வா?..ஓ! எம்.எல்.ஏ.ன்னு சொல்ல வந்தியா?

முரு: அதத்தாண்ணே நானும் சொன்னேன்! எம் ஏ!

மணி: எதத்தாண்டா நீயும் சொன்னே, ரப்பர் நாக்கு வாயா? எம்.ஏ.வுக்கும், எம்.எல்.ஏ.வுக்கும் வித்தியாசம் இல்லையா?

முரு: என்னண்ணே வித்தியாசம்?

மணி: ஒண்ணுலே எல் இருக்கு, இன்னொண்ணில இல்லே! மூஞ்சியைப் பாரு, மொதலைக்குட்டி மாதிரி. அது சரி, அது என்னடா விளையாட்டு?

முரு: அரட்டை அரங்கத்தில -அதாங்க அரசியல் அரங்கம் - அதுல எல்லா எம்.ஏ.க்களும் இருப்பாங்க.

மணி: டேய், எம்.ஏ. இல்லை எம்.எல்.ஏ.ன்னு இப்பத்தானே சொன்னேன்!

முரு: இவங்க எம்.எல்.ஏ. இல்லேங்க, வேறே ஆளுங்க. எம்.ஏ.ன்னா, மக்களை ஏமாத்தறவங்கன்னு அர்த்தம்.

மணி: அப்படியா? நல்லா இருக்கே! மேலே சொல்லு.

முரு: அரங்கத்தில பல அணிகள் இருக்கும். ஒவ்வொரு அணியிலேயும் எம்.ஏக்கள் இருப்பாங்க. ஒரு நடுவர் இருப்பாரு. எம்.ஏக்கள் அடிச்சுக்கறதும், நடுவர் அவங்களைத் தடுக்கறதும், சில பேருக்கு தண்டனை கொடுக்கறதுன்னும் ரொம்ப இன்டரஸ்டா இருக்கும்ணே!

மணி: இந்த வெளயாட்டுக்கு நாம ரெண்டு பேர் மட்டும் எப்படிப் போதும்? நான் ஒன்னை அடிக்கும்போது, அதைப் பாக்கறதுக்கு ஒரு ஆளாவது இருக்க வேண்டாமா?

முரு: அதுக்குத்தான் நம்ம வேலுவையும் கூட்டிக்கிட்டு வந்திருக்கேன்.

மணி: அட்ரா சக்கை. எங்க அந்தக் கொள்ளிவாய்ப் பிசாசு?

முரு: இதோ எனக்குப் பின்னாலேதான்  நிக்கறாரு. வேலு, வாய்யா முன்னாடி!

வேலு: கும்பிடறேன்யா!

மணி: கும்பிடறேன்னு வாயால சொன்னாப் போதுமா? கை கூப்பிக் கும்பிட்டா என்ன கொறைஞ்சா போயிடுவே?

வேலு: இப்பத்தான் போஸ்டர் ஒட்டிட்டு வந்தேன். அதனால ரெண்டு கையிலேயும் பசை. கும்பிட்டா ரெண்டு கையும் ஒட்டிக்குமோன்னு பயமா இருந்திச்சு. பாருங்க!

(மணியின் சட்டையில் தன் இரு உள்ளங்கைகளையும் வைக்க, கைகள் சட்டையில் ஒட்டிக்கொள்கின்றன.)

மணி: டேய் கையை எடுடா, கபோதி. நல்ல சட்டையை நாசம் பண்ணிட்டியேடா!... கையை மெதுவா இழுடா -  சட்டை பிஞ்சுடப் போவுது.

வேலு: இப்பத்தான் சட்டை நல்லா டிசைனா பாக்கற மாதிரி இருக்கு!

மணி: இரு இரு. ஒன் சட்டையில டிசைன் போட்டு விடறேன் ஒட்டடைத் தலையா! ஓ, நீதான் சட்டையே போட மாட்டியே!.  அது சரிடா முருகா, நாம மூணு பேரு இருக்கோம். நடுவர் வேஷம் போட ஒரு ஆளு வேணுமே!

முரு: வேஷம் போடறதா? நாம என்ன நாடகமா நடத்தப் போறோம்? வெளையாடத்தானே போறோம்?

மணி: ஏதோ ஒண்ணு. நடுவர் யாரு? அதைச் சொல்லு!

முரு: நீங்கதானே பெரியவரு, நீங்கதாண்ணே நடுவரா இருக்கணும்.

மணி: அது எனக்குத் தெரியும்டா நாயே. நடுவரா இருந்தா ஒன்னைப் போட்டு மிதிக்க முடியாதேன்னு பாக்கறேன்!

முரு: அப்படின்னா நம்ம சந்திரன் அண்ணனை  நடுவரா வச்சுக்கலாம். அதோ அவரே வந்துட்டாரே!

மணி:  (முணுமுணுப் புடன்) வந்துட்டான்யா கழுகு!..  (சிரித்துக்கொண்டே) வாங்க நடுவரே!

முரு: ஒக்காருங்க நடுவரே!

எஸ் எஸ்: கவுத்துட மாட்டிங்களே! சரி பட்டிமண்டபத்தை ஆரம்பிக்கலாமா?

மணி: ஏண்டா நடுவர்னா, பட்டிமண்டபம்தான் நடத்துணுமா?

எஸ் எஸ்: இல்லே பாட்டி மண்டபம் கூட நடத்தலாம், ஏம்ப்பா முருகா, பாட்டிங்க யாராவது வந்திருக்காங்களா?

மணி: டேய் இது மாதிரி இடக்காப் பேசிக்கிட்டிருந்தே, நடுவர்னு கூடப் பாக்க மாட்டேன்.

எஸ் எஸ்: சரி எதுவா இருந்தா என்ன? மொதல்லே எல்லாரும் எழுந்து ஜனகணமண பாடுங்க.

முரு: அதைக் கடைசீலதாங்க பாடணும்!

எஸ் எஸ்: ஓ இப்ப அப்படி மாத்திட்டாங்களா? எனக்குத் தெரியாம போச்சே! சரி, இன்னிக்கு அரங்கத்திலே என்ன பிரச்னை?

மணி: (தனக்குள்)ஆரம்பத்திலேயே பிரச்னையா? சரியான கரிநாக்குவாயனா இருப்பான் போலே இருக்கே!

எஸ் எஸ்: என்ன அங்கே முணுமுணுப்பு?

மணி: அதில்லீங்க நடுவரே. ரெண்டு நாயிலெ மொதல்லே எந்த நாயை அடிக்கறதுன்னு யோசனை பண்ணிக்கிட்டிருக்கேன்!

வேலு: எங்களைப் பாத்தா நாய்ங்கறீங்க? அப்ப நீங்க என்ன ஓநாயா?

முரு: நடுவர் அவர்களே இவர் எங்களைப் பாத்து நாய்ன்னு சொன்னதுக்கு இவர் மேலே உரிமைப் பிரச்னை கொண்டு வரப் போறேன்!

எஸ் எஸ்: உருளைக்கிழங்கு பஜ்ஜி கொண்டு வந்தாலாவது வாய்க்கு ருசியா சாப்பிடலாம்.  உரிமைப் பிரச்னை கொண்டு வந்து என்ன பிரயோசனம்?

முரு: அதில்லேங்க, அவரு எங்களை நாய்னு திட்டலாமா?

வேலு: அதானே, வேறே ஏதாவது சொல்லித் திட்டியிருக்கலாம்லே?

எஸ் எஸ்: அதுவும் சரிதான்.  இங்க பாருங்க மிஸ்டர் மணி, நீங்க இவங்களை நாய்னு  திட்டியிருக்கக் கூடாது. இது தெரிஞ்சா நாய்களுக்கு எவ்வளவு அவமானமா இருக்கும்?

மணி: ஓகோ! இந்த நாய்ங்க்ளை நாயின்னு திட்டக் கூடாதோ? அப்போ கழுதைன்னு திட்டிட்டுப் போறேன்!

முரு:  என்னண்ணே இது ஒங்க பேரைச் சொல்லி எங்களைக் கூப்பிடறீங்க?

மணி: டேய் மண்டையைப் பொளந்துடுவேண்டா மாட்டுக்கொம்புத் தலையா!

எஸ் எஸ்: அவருதான் ஒங்களை அண்ணேன்னு கூப்பிடறாரே, அப்ப ரெண்டு பேரும் ஒரே இனம்தானே?

வேலு:  அப்படிப் போடுங்க நடுவரே! இங்கே நான் ஒருத்தன் தான் மனுஷன் ஆஹ்ஹாங்!

எஸ் எஸ்: அப்ப நான் யாருய்யா?

வேலு:  நீங்கதான் நடுவராச்சே? இதுவும் இல்லாம அதுவும் இல்லாமதானே இருக்கணும்!

எஸ் எஸ்: இப்ப நான் எதுவா இருக்கேன்னு எனக்கே சந்தேகமா இருக்கு! சரி, அடுத்த அயிட்டத்துக்குப் போவோம்.

மணி: ஆமாம். இங்கே பந்தி நடக்குது. மொதல் அயிட்டமா ஜாங்கிரி போட்டாங்க. இப்ப அடுத்த அயிட்டத்துக்குத் தயாரா நிக்காறாரு நடுவரு! நல்ல நடுவர் வந்து வாய்ச்சாருப்பா!

எஸ் எஸ்: என்ன அங்கே முணுமுணுப்பு?

மணி: கந்தசஷ்டி கவசம் சொன்னேனுங்கோ!

முரு: நடுவர் அவர்களே, நான் எழுப்பிய உரிமைப் பிரச்னை என்ன ஆச்சு?

எஸ் எஸ்: போயே போச்சு, போயிந்தே, இட் இஸ் கான். (யோசித்தபடி) இதே மாதிரி வேறே யாரோ சொல்லுவாங்களே!

மணி: நாயே என்னடா கேட்டே? உரிமைப் பிரச்னைதானே? நானே இதைத் தீர்த்து வைக்கிறேன் பாரு!

(முருகனின் முகத்தில் மணி ஓங்கிக் குத்த, மூக்கிலிருந்து ரத்தம் வடிகிறது. வேலு அவரைத் தாங்கிப் பிடிக்கிறார்.)

வேலு: அடப்பாவி! எடுப்பா இருந்த மூக்கை இப்படி ஒடைச்சுட்டானே!

மணி: ஆமாம் பெரிய கிளியோபாட்ரோ மூக்கு பாரு. வாயால மூச்சு விடற பன்னிக்கு எதுக்குடா மூக்கு?

முரு: நடுவர் அவர்களே, இவரு என் மூக்கை ஒடைச்சுட்டாரு. உடனே இவரைக் கைது செஞ்சு ஜெயிலிலே போடச்  சொல்லுங்க.

எஸ் எஸ்: இருங்க. மொதல்ல என் மூக்கு இருக்கான்னு பார்த்துக்கறேன். நல்லவேளை, அப்படியேதான் இருக்கு. யார் அங்கே, இந்த மணியைக் கைது செய்யுங்க!

மணி: இவரு பெரிய மகாராஜா. யாரங்கேன்னு கை தட்டினதும் ரெண்டு சிப்பாய்ங்க கையிலே ஈட்டியோடு வந்து நிப்பாங்க! வடுமாங்காத் தலையனையெல்லாம் நடுவனாப் போட்டா இப்படித்தான். யோவ் நடுவா, நான் இவன் மூக்கை ஒடைக்கலைய்யா. இவன் பொய் சொல்றான்.

வேலு: அய்யய்யோ! நாங்கள்ளாம் கண்ணால பாத்தோம்.

மணி: ஏண்டா ஓணான், நீ வேலிக்குச் சாட்சி சொல்ல வந்துட்டியா? கண்ணால பாத்தானாம்! ஒன் கண்ணுல என்ன காமராவா இருக்கு? நான் அடிச்சதை ஃபோட்டோ புடிச்சு வச்சிருக்கியா என்ன?

எஸ் எஸ்: நானும் பார்த்தேனே! (பாடத் தொடங்குகிறார்) எந்தன் சபையில் உந்தன் அடியை நானும் பார்த்தேனே, ராஜாவே நானும் பார்த்தேனே!

மணி: (தனக்குள்) விட மாட்டாங்க போல இருக்கே! எப்படியோ சமாளிக்க வேண்டியதுதான். (உரக்க) அதாவது நடுவரே, இந்தப் பன்னி என்னோட நாற்காலியில ஒரு குண்டூசியை வச்சுட்டான். அது தெரியாம நான் ஒக்காந்து அது குத்தின வலி தாங்காம அலறி அடிச்சிக்கிட்டு வேகமா எழுந்தேனா, அப்ப என்னோட கை அவனோட தேங்காக் கொப்பரை மூக்கில பட்டுடுச்சு, அவ்வளவுதான்.

வேலு: அடி ஆத்தாடி! அத்தனையும் பொய்! குண்டூசி எங்கே? காட்டச் சொல்லுங்க.

மணி: (தனக்குள்) நல்ல வேளை குண்டூசி குத்தின எடத்தைக் காட்டச் சொல்லுங்கன்னு சொல்லாம விட்டானே, கொரங்குத் தலையன்! சரி கீழே ஏதாவது குண்டூசி கெடக்கான்னு தேடுவோம்.... ம்ம்ம்.. ஒரு ஆணிதான் இருக்கு. சரி, இதையே காமிச்சுப் பெரிய குண்டூசின்னு சொல்லிச் சமாளிக்க வேண்டியதுதான்! (குனிந்து அதை எடுத்து) நடுவரே, இதோ அந்தக் குண்டூசி!
(ஆணியை நடுவர் முகத்துக்கு நேரே எறிய, அது நடுவர் நெற்றிப் பொட்டில் குத்தி ரத்தத் துளி வெளிப்படுகிறது)

எஸ் எஸ்: ஆ! சர்க்கஸ்ல கத்தி வீசறவன் மாதிரி குறி பார்த்து வீசிட்டானே! இந்த சந்தர்ப்பத்துக்காக எவ்வளவு நாள் காத்துக்கிட்டிருந்தானோ தெரியலே!

வேலு: கொலை கொலை, ரத்தம்!

மணி:  டேய்! கொடலை உருவிடுவேன்டா கொய்யாக்காத் தலையா! ரத்தத்தைக் கண்டாலே மயக்கம் போட்டு விழறவனெல்லாம் இங்கே எதுக்குடா வந்தீங்க?

முரு: நடுவரே, இவரை உடனே உள்ளே புடிச்சுப் போடச் சொல்லுங்க. இல்லேனா நம்ப எல்லாரையுமே இவரு கொன்னு போட்டுடுவாரு.

மணி: அவன் கெடக்கான் விடுங்க நடுவரே. ஒங்க நெத்தியிலே இருக்கிற ரத்தத்துளி குங்குமப்பொட்டு மாதிரி எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா?

எஸ் எஸ்: குங்குமப்பொட்டா? இது தெரிஞ்சா, நாளைக்கு ஒருவேளை அந்தக் கட்சிக்குப் போக வேண்டியிருந்தா, அந்தத் தலைவர் நம்மளை உள்ளே சேர்க்க மாட்டாரே! (நெற்றியைக் கைகுட்டையால் அழுந்தித் துடைத்தபடி) இந்த வெளையாட்டுக்கு நான் வரலேப்பா! நான் வீட்டுக்குப் போறேன். (போகிறார்.)

மணி: போய்ச்சேரு நல்லபடியா! (முருகனிடம்) டேய் பனங்காய்த்தலையா, நீ சொன்ன ஆட்டம் நல்லாத்தாண்டா இருந்தது. ஆமாம். மூக்கிலே ரத்தம் ஒழுகுதே. அடி பலமாப் பட்டுடுச்சா?

முரு: அதான் இல்லே! இன்னிக்கு என்ன தேதி?

மணி: ஏப்ரல் ஒண்ணு. அதுக்கென்ன? ஓ, இன்னிக்கு முட்டாள் தினம் இல்லே! ஒன்னோட நாள் ஆச்சே!

முரு: முட்டாளானது நான் இல்லியே, நீங்கதானே!

மணி: என்னடா சொல்றே?

முரு: அண்ணே! ஒரு சின்ன பிளாஸ்டிக்  சாஷேயில கொஞ்சம் சிவப்பு இங்க்கு ஊத்தி அதை என் மூக்குக்க்குள்ளே வச்சிருந்தேன். ஒங்க கை பட்டதும் அந்த சாஷே ஒடஞ்சு  சிவப்ப் இங்கு கொட்ட ஆரம்பிச்சுது. நீங்களும் அதை ரத்தம்னு நெனச்சு ஏமாந்துட்டீங்க! எப்படி என் ஐடியா?

மணி: மூக்குகுள்ள சாஷே வச்சிருந்தியா? ஏண்டா, அது என்ன மூக்கா, இல்லே போஸ்ட் ஆஃபிஸ் மெயில் பேகா? இருக்கட்டும். இப்ப நெசமாவே ரத்தம் வரவழைச்சுக் காட்டறேன் பாரு!

(மணி முஷ்டியை மடக்கி முருகனின் மூக்கைக் குறி வைத்துத் தாக்க, முருகன் குனிந்து கொள்கிறார். மணியின் கை முஷ்டி முருகனின் தலையில் மோதி அவர் வலியால் துடிக்க, முருகனும் வேலுவும் கைகொட்டிச் சிரிக்கிறார்கள்!)


No comments:

Post a Comment